அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸில் பிளவு... பா.ஜ.கவுக்கு தாவும் 10 எம்.எல்.ஏக்களால் பரபரப்பு!!
குவஹாத்தி: அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவ முடிவெடுத்து இருப்பது அக்கட்சியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 2001ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 78 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மயுடன் ஆட்சி அமைத்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 5 எம்.எல்.ஏக்களைத்தான் பெற முடிந்தது.
ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 7 ஐ பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எப்படியும் அஸ்ஸாமில் ஆட்சியை அமைத்துவிடுவது என்பதற்கான வியூகங்களை வகுத்து பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.
40 முஸ்லிம் தொகுதிகள்
அஸ்ஸாமைப் பொறுத்தவரையில் 40 தொகுதிகளில் முஸ்லிம்கள்தான் தீர்மானிக்கும் சக்திகள். அதனால் இந்த 40 தொகுதிகள் நிச்சயம் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்காது என்பது அக்கட்சி அறிந்த விஷயமே.
தேவை 63 தொகுதிகள்
எஞ்சியவற்றில் ஆட்சி அமைக்க 63 தொகுதிகளில் வென்றாக வேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு அஸ்ஸாமில் போதுமான அடித்தளம் இல்லை. இதனால் ஆளும் காங்கிரஸின் அதிருப்தியாளர்கள், அசாம் கன பரிஷத் உள்ளிட்ட மாநில கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரையும் வளைத்துப் போட்டுத்தான் தேர்தல் வியூகத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பா.ஜ.க.
காங்கிரஸ் தோற்கும்?
அதே நேரத்தில் பல ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வியைத் தழுவியிருக்கிறது காங்கிரஸ்.
இதேபோன்ற நிலை அஸ்ஸாமிலும் காங்கிரஸுக்கும் ஏற்படும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். இந்த யதார்த்தமான அரசியல் களம் பாரதிய ஜனதாவுக்கு சாதகமான ஒன்றாகவும் இருக்கிறது.
தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
இந்நிலையில்தான் தற்போது ஆளும் காங்கிரஸில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவ முடிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் 10 எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளதால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் விளக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் உள்ளனர்.
அதிர்ச்சி- ஆலோசனை
இந்த எம்.எல்.ஏக்கள் தாவல் ஆளும் காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அன்ஜன் தத்தா உட்பட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் 10 எம்.எல்.ஏ.க்கள் விலக முடிவு செய்திருப்பது குறித்தும் சட்டசபை தேர்தல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் எம்.எல்.ஏக்களைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான பகீர பிரயத்தனத்தில் காங்கிரஸ் கட்சி முயற்சித்தும் வருகிறது.