சோனியா தலைமையில் காங்கிரஸ் அவசர கூட்டம் !
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் அவசர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகளால் எதிர்கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில் பண விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் அவசர குழு கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது. இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் இந்த விவகாரத்தை அவையில் எழுப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.