தேர்தலுக்கு முன்பே தொடங்கிய கட்சித்தாவல்: பாஜகவில் சேர்ந்தார் காங் வேட்பாளர்
போபால்: லோக்சபா தேர்தல் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியால் நேற்று பெயர் அறிவிக்கப் பட்ட மத்திய பிரதேச காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இன்று பாஜகவில் இணைந்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
நடைபெற உள்ள 16வது லோக்சபா தேர்தலுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று காங்கிரஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியல் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் கமிட்டி, அந்த பட்டியலை இறுதி செய்யப் பட்டது.
இந்த முதலாவது வேட்பாளர் பட்டியலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 194 பேர்களின் தொகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் தொகுதி வேட்பாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாகீராத் பிரசாத்தின் பெயர் அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென இன்று பிரசாத் அதிரடியாக காங்கிரஸில் இருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டுத் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.