உ.பியில் முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் மும்முர பிரசாரம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 16 லோக்சபா தொகுதிகளில் கணிசமான வாக்காளர்களாக இருக்கும் முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் 20 முதல் 50 சதவீதம் வரை முஸ்லிம்கள் இருக்கின்றனர். இந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை இவர்களே தீர்மானிக்கிறார்.

16 தொகுதிகள் எவை?
உ.பி.யின் சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், சம்பல், அம்ரோனா, மீரட், முசாபர்நகர், கைய்ரானா, ஷாஜஹான்பூர், லக்னோ, பார்பாங்கி, கைசேர்கஞ்ச், டோமைரிகஙஞ்ச், பரேய்லி, ராம்பூர், பரைய்ச் ஆகியவை முஸ்லிம் மக்கள் அதிகம் இருக்கும் தொகுதிகள்.

இமாமுடன் சோனியா சந்திப்பு
இதனால்தான் அண்மையில் டெல்லி ஜூம்மா மசூதி இமாம் புகாரியை சோனியா காந்தி நேரில் சந்தித்து முஸ்லிம் வாக்குகள் பிளவுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவரும் நேற்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸுக்கு வாக்களிப்போம் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸுக்கு ஆதரவு- இமாம்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு உ.பி.யில் நடைபெற்ற முசாபர்நகர் வன்முறைகளை கையிலெடுத்துக் கொண்டு சமாஜ்வாடி கட்சி அரசை விமர்சித்து வருகிறது. அதேபோல் வகுப்பு மோதல் தடுப்பு மசோதா பற்றியும் பேசி வருகிறது காங்கிரஸ்.

மோடி கூறுபோடுவோம் பேச்சு
இந்த மாநிலத்தில் சஹாரன்பூர் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்தான் மோடியை துண்டு துண்டாக வெட்டி கூறுபோடுவோம் என்று பேசி சிறைக்குப் போனார். இதை ஏற்கவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினாலும் 2002 குஜராத் வன்முறைகள் குறித்து பேசி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்.

சமாஜ்வாடி, பகுஜன் மும்முரம்
சமாஜ்வாடி கட்சியோ அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்வோம் என்கிறது. பகுஜன் சமாஜ்கட்சியும் இதேபோல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்போம் என்கிறது.

முசாபர்நகர் கலவரத்தால் சிக்கல்
ஆனால் முசாபர் நகர் உட்பட முஸ்லிம்களுக்கு எதிராக 150க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் நிகழ்ந்திருப்பதால் அந்த மக்கள் மிகவும் கோபத்தில் இருப்பதாகவே தெரிகிறது. ஆசாம்கார் தொகுதியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை எதிர்த்து ராஷ்டிரிய உலாமா கவுன்சில் தலைவர் மெளலானா ஆமிர் போட்டியிடுகிறார்.

பாஜகவும் முயற்சி
இப்படி இதர கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு முஸ்லிம்களின் வாக்குகளை வேட்டையாட வியூகம் வகுக்க, பாஜகவோ ராமர் கோயில் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறது. அத்துடன் கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவும் தயார் என இறங்கியும் வருகிறது.












Click it and Unblock the Notifications