ம.பியில் காங். எம்.பி. மீனாட்சி நடராஜனை முற்றுகையிட்டு காங்கிரஸார் போராட்டம்
மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல் டிக்கெட் கொடுக்கும் விவகாரம் தொடர்பாக அங்கு காங்கிரஸ் கட்சி கலகலத்துக் கிடக்கிறது. ஒரு தொண்டர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளரான எம்.பி. மீனாட்சி நடராஜனை காங்கிரஸ் கோஷ்டியினர் முற்றுகையி்ட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் பெரும் கோபத்துடன் முற்றுகையிட்டதால் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் ஓடி தப்ப வேண்டியதானது. நீமுச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அவரது காரை நூற்றுக்கணக்கான காங்கிரஸார் சூழ்ந்து விட்டனர். அத்தனை பேரும் ராஜ்குமார் அஹிர் என்ற காங்கிரஸ் தலைவரின் ஆதரவாளர்களாம்.
அஹிருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்தே மீனாட்சியைக் குறி வைத்தனர் அவரது ஆதரவாளர்கள்.
பின்னர் மீனாட்சி நடராஜன் பலத்த பாதுகாப்புடன் காந்தி பவனுக்கு காரில் அழைத்து வரப்பட்டார். ஆனால் அங்கு ஒரு மணி நேரம் அஹிரின் ஆதரவாளர்கள் சுற்றி நின்று கோஷமிட்டபடி இருந்ததால் மீனாட்சியால் வெளியேற முடியாமல் போனது.