மோடிக்கு எதிராக வாரணாசியில் காங்- சமாஜ்வாடி சார்பில் பொதுவேட்பாளர் போட்டி?
வாரணாசி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை களம் இறக்குவது குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் ஏற்கெனவே கைலாச் செளராசியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

வாரணாசியில் 6 முனைப் போட்டி?
மொத்தம் இத்தொகுதியில் தற்போதைய நிலவரப்படி 6 முனைப் போட்டி நிலவுகிறது. இது நரேந்திர மோடிக்கு சாதகமாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ்- சமாஜ்வாடி சார்பில் பொதுவேட்பாளர்?
இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாடியும் மோடிக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த பொதுவேட்பாளர் விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவும் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருவர் பெயர் பரிசீலனை
இந்த ஆலோசனையின் முடிவில் இரண்டு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. வாரணாசியின் சிவபெருமானின் பிரதிநிதியாக கருதப்படுகிறவர் அதன் மன்னர். ஆனால் அவர் அரசியலை விரும்பவில்லை. ஆனால் அவரது உறவினரான அஹிப்ஹூசன் அரசியலில் ஆர்வம் கொண்டவர். அதேபோல் டைம் பத்திரிகையின் விருதுபெற்ற பனாரஸ் பல்கலைக் கழக பேராசிரியரும் சங்கத் மோசன் கோயில் தலைமை குருவுமாகிய விஸ்வாம்பர்நாத் மிஸ்ரா. இவர்கள் இருவரில் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்துவது என காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன.
ஆசாம் கான் பொதுவேட்பாளரா?
அப்படி பொதுவேட்பாளர் நிறுத்தப்படும் நிலையில் சமாஜ்வாடி கட்சி அறிவித்த வேட்பாளர் வாபஸ் பெறப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கானை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை முலாயம்சிங் யாதவ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications