காங்கிரஸ் கட்சியில்தான் விஷம் அதிகம்: சோனியாவுக்கு மோடி பதில்
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
ஜெய்ப்பூரில் ராகுல்காந்தி ஒருமுறை பேசும்போது, பதவி என்பது விஷம் போன்றது என்று தனது தாயார் சோனியாகாந்தி கூறியதாக குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டை காங்கிரஸ்தான் நீண்டகாலம் ஆட்சி செய்தனர். அப்படி என்றால் விஷத்தை யார் நீண்டகாலம் சுவைத்தார்கள்.
வேறு எந்த கட்சியும் அல்ல காங்கிரஸ் கட்சிதான். இதனால், அக்கட்சியை விட வேறு எந்தக் கட்சி அதிக விஷத்தன்மை கொண்டதாக இருக்க முடியும்?
ஊடகங்கள் தன்னை சுற்றி இருக்கும்போதுதான், ஏழைகள் குறித்தும், வறுமை குறித்தும் ராகுல்காந்திபேசுகிறார். தன்னை புகைப்படக்காரர்கள் சூழ்ந்திருக்கும்போது, ஏழைகள் குறித்து தாம் வருத்தம் அடைந்திருப்பதாக காட்டிக் கொள்ள அவர் அப்படி பேசுகிறார்.
மீடியா கேமராக்களுடன் அருகில் உள்ள குடிசைகளில் நுழைந்து பார்ப்பது என்ற அளவில் மட்டுமே அவருக்கு வறுமை குறித்து தெரியும் என்றார் மோடி.