"தேர்தல் தோல்விக்கு மன்மோகன் சிங்கை காங்கிரஸ் பலிகடா ஆக்கும்": பாஜக கிண்டல்
டெல்லி: "நீங்க வேணும்னா பாருங்க... காங்கிரஸ் தோற்றதும் அந்த பழியை பிரதமர் மன்மோகன்சிங் மீது போட்டு பலியாடாக்கிவிடுவார்கள்" என்று பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்தார்.
எக்சிட் போலில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும், காங்கிரஸ் கூட்டணி தோல்வியடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரச்சார களத்தில் முன்னின்றது ராகுல்காந்தி, சோனியாகாந்தி, பிரியங்கா காந்திதான். எனவே தோல்விக்கு ராகுல்காந்தியைதான் காரணமாக அரசியல் விமர்சகர்கள் பார்ப்பார்கள். ஆனால் இதை காங்கிரஸ் மறுக்கிறது.

ராகுல்காந்திக்கும் தோல்விக்கும் சம்மந்தம் இல்லை என்பதுபோல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் பேட்டியளித்த பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், ஏதாவது நல்லது நடந்துவிட்டால் அனைத்து புகழையும் ராகுல்காந்திக்கு அளிப்பதும், எதிர்மறையாக ஏதாவது நடந்துவிட்டால் வேறு யார் மீதாவது பழிபோடுவதும் காங்கிரசுக்கு வாடிக்கை. எனவே தேர்தல் தோல்விக்கு பிரதமர் மன்மோகன்சிங் பலிகடாவாக்கப்படுவார்.
காங்கிரசுக்குள் இப்போதெல்லாம், கூட்டு பொறுப்புணர்ச்சி பற்றி பேச்சு அதிகமாக கேட்கிறது. அதாவது தோல்வியை மட்டும் கூட்டாக பகிர்ந்துகொள்ள வேண்டும், வெற்றியை ராகுலுக்கு மட்டும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் அந்த கோஷத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள முடிவது.
மன்மோகன்சிங்கை தேர்தலில் பலிகடாவாக்குவது சரியில்லை. ஏனெனில் அவரிடம் எந்த அதிகாரமும் கிடையாது. காந்தி குடும்பத்திடம்தான் அதிகாரம் கொட்டிக்கிடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 சதவீத தனது வழக்கமான வாக்குகளை இழந்துவிட்டது. ஆனால் பாஜகவோ மாநில கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து வாங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications