2வது முறையாக மேகாலயா முதல்வரானார் கான்ராட் சங்மா! பதவியேற்பில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
மேகாலயா முதல்வராக பதவியேற்றார் கான்ராட் சங்மா. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
ஷில்லாங்: மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
மேகாலயா சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனினும் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 26 இடங்களில் வென்றது. 60 சட்டசபைகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை.

இந்த நிலையில் என்பிபி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக பாஜக தேர்தல் வாக்கு எண்ணிக்கை வந்த தினமே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் மார்ச் 7 ஆம் தேதி மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவியேற்கும் என சொல்லப்பட்டது.
அதன்படி இன்றைய தினம் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக கான்ராட் சங்மா பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். அது போல் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்டார்.

பாஜக மற்றும் எச்எஸ்பிடிபி கட்சியின் சார்பில் தலா 2 எம்எல்ஏக்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் என 32 பேரின் ஆதரவுடன் என்பிபி ஆட்சி பொறுப்பேற்றது. மேகாலயாவில் ஷில்லாங்கில் ராஜ்பவனில் இந்த பதவியேற்பு விழா நடந்தது. இதில் முதல்வராக கான்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார்.
மேகாலயாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்கமாவின் என்.பி.பி கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 18 இல்தான் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இந்த நிலையில் கான்ராட் சங்மா புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாஜக, இதர உதிரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தார். இந்த நிலையில் என்பிபி பாஜக கூட்டணி முறிந்துவிட்டது.












Click it and Unblock the Notifications