மட்டர் பன்னீர் ஆர்டர் கொடுத்தா? சிக்கன் கறியையா அனுப்புவீங்க? பிரபல ஹோட்டலுக்கு நேர்ந்த கதி!
போபால்: மத்திய பிரதேசத்தில் மட்டர் பன்னீர் ஆர்டர் கொடுத்ததற்கு சிக்கன் கறியை அனுப்பி வைத்த பிரபல உணவு விடுதிக்கு 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரபலமான கிளப்களில் ஒன்றாக விளங்கும் ஜிவாஜி கிளப் மூலம் பல்வேறு உணவு விடுதிகளும் நடத்தப்படுகின்றன. இந்த உணவு விடுதிகளில் ஆன்லைன் டெலிவரி சேவையும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் கவாலியரில் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா என்பவர் தனது குடும்பத்தினருக்காக பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ மூலம் ஜிவாஜி கிளப் உணவு விடுதியில் இருந்து மட்டர் பன்னீர் ஆர்டர் செய்து இருக்கிறார்.

சிக்கன் கறியை கண்டு முகம் சுழித்தனர்
ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே சோமோட்டா டெலிவரி மேனும், உணவு பொட்டலத்தை கொடுத்து விட்டு சென்று விட்டார். இதை வாங்கிய ஸ்ரீவத்சவா குடும்பத்தினர் மட்டர் பன்னீரை ஒரு கை பார்த்துவிடலாம் என திறந்து பார்த்த போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் முற்றிலும் சைவ பிரிய குடும்பத்தினரான அவர்கள் உள்ளே இருந்த சிக்கன் கறியை கண்டு முகம் சுழித்தனர்.

நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையீடு
இதனால் கடுப்பான ஸ்ரீவத்சவா இது குறித்து உணவு விடுதியை சேர்ந்தவர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், இதற்கு அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. இதனால், மேலும் கடுப்பான அவர் மட்டர் பன்னீரை ஆர்டர் செய்ததற்கு சிக்கன் கறியை கொடுத்த உணவு விடுதி நிறுவனத்துக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார். அதன்படி, ஸ்ரீவத்சவா தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

தக்க பாடம் புகட்ட வேண்டும்
அந்த மனுவில், சுத்த சைவ குடும்பமான தங்கள் குடும்பம், அந்த உணவு விடுதியினர் சிக்கன் கறியை தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியது. இதனால், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டோம். எனவே, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உணவு விடுதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் தங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முறையிட்டு இருந்தார்.

ரூ. 20 ஆயிரம் அபராதம்
இந்த மனுவை விசாரித்த கவாலியர் நுகர்வோர் நீதிமன்றம், உணவு விடுதிக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்ததோடு வழக்கு செலவுக்கு ஆன தொகையையும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்று உணவு விடுதிக்கு உத்தரவு பிறப்பித்தது.

ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்
உணவு விடுதிகள் இதுபோன்று தவறுதலாக டெலிவரி செய்வதும், நுகர்வோர் நீதிமன்றங்களை மக்கள் நாடுவதும் இது முதல் முறையல்ல. ஏற்கனவே, நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்று இருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு அசைவ பீட்சா டெலிவரி செய்யப்பட்டு விட்டதாகவும் தனது மத நம்பிக்கைக்கு எதிராக இது அமைந்ததால், வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று வேதனையடைந்துள்ளார். இதில் அவர் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றத்தின் கதவை தட்டியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications