ஹைதராபாத்தில் அரபு நாட்டவருக்கு இரையாகும் ஏழை சிறுமிகள் - ஒப்பந்த திருமண மோசடி கும்பல் கைது
ஹைதராபாத்தில் சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மதகுரு உட்பட தரகர்களையும் கைது செய்துள்ளது ஹைதரபாத் போலீஸ்.
Recommended Video

ஹைதராபாத்: ஏழை பெண்களை, குடும்பங்களை குறி வைத்து நடத்தப்படும் ஒப்பந்தத் திருமணம் என்ற மோசடி தற்போது ஹைதராபாத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதாக காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் அரபு நாட்டவர்கள், மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளை போலீஸ் கைது செய்து உள்ளது.
நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம், லிவிங் டுகெதர் என இன்றைக்கு பல திருமணங்கள் இருக்க தற்போது "ஒப்பந்த திருமணம்" இந்திய மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திராவின் ஹைதராபாத்துக்கு மாணவர் விசாவில் படிக்க வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், அங்குள்ள அப்பாவி பாமர ஏழை முஸ்லீம் பெண்களை திருமணம் செய்து கொண்டு, சில வருட படிப்பு காலம் முடிந்து தாயகம் திரும்பும் போது அவர்களை விவாகரத்து செய்துவிட்டுச் சென்றுகின்றனர். இதனால் பாதிப்பிற்கு ஆளாவது என்னவோ ஏழை சிறுமிகள்தான்.

அரபு நாட்டவருக்கு திருமணம்
கடந்த 2015ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் ஒவ்வொரு வாரமும் 5, 6 சிறுமிகள் அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலநிலை காணப்படுகிறது என போலீஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதியவருக்கு திருமணம்
சமீபத்தில் கூட ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ. 5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட வெளி உலகிற்கு தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுத்த போதுதான் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

8 பேர் கைது
இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தியதில் ஹைதராபாத் நகரில் சிறுமிகளை அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் கும்பல் சிக்கி உள்ளது. ஹைதராபாத் போலீஸ் இவ்விவகாரத்தில் 5 ஓமன் நாட்டவர்கள், 3 கத்தார் நாட்டவர்கள் மற்றும் மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளை கைது செய்து உள்ளது.

போலீஸ் ரெய்டு
திருமணம் செய்து வைக்கும் மத குருக்கள் போலியான திருமண சான்றிதழ் தயார் செய்து உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சிறுமிகள் திருமணம் தொடர்பாக தகவல் கிடைத்து ஹைதராபாத் போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் ஷேக் திருமண கும்பல் வசமாக சிக்கிஉள்ளது.

ஏஜெண்டுகள் சிக்கினர்
ஹைதராபாத் முதல் அரபு நாடுகள் வரையில் நீடித்திருக்கும் நெட்வோர்க் கும்பலானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் போலீஸ் 35 ஏஜெண்டுகளை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும் தெரியவந்து உள்ளது.

சிக்கியது எப்படி?
ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி பேசுகையில், சிறுமிகள் திருமணத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவலின் பெயரில் எங்களுடைய சோதனையை தொடங்கினோம். சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உள்ளனர். 12 சிறுமிகள் இந்த கொடூரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

ரூ.10 லட்சம் செலவு
இந்த கும்பல் முதலில் மைனர் சிறுமிகள் உள்ள ஏழை குடும்பங்களை குறிவைக்கின்றனர். ஆசைவார்த்தை கூறியும், பணம் வழங்குவதாக கூறியும் ஏமாற்றுகின்றனர். அரபு நாடுகளில் மிகவும் மகிழ்ச்சியாக சிறுமிகள் வாழலாம் எனவும் ஏமாற்றுகின்றனர். சிறுமிகளை திருமணம் செய்ய அரபு நாட்டவர்கள் சுமார் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் செலவு செய்து உள்ளனர். பணம் முகவர்கள் மற்றும் திருமணம் செய்துவைக்கும் மத குருக்களால் பெறப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார்.

ஓமன் நாட்டு முதியவர்
கடந்த ஆகஸ்ட் மாதம் 16 வயது சிறுமியை பணம் கொடுத்து திருமணம் செய்ய 77 வயது ஓமன் முதியவரை ஹைதராபாத் போலீஸ் கைது செய்தது.
அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் விற்பனை செய்யும் கும்பல் ஹைதராபாத் மற்றும் அரபு நாடுகளில் புரோக்கர்களாக செயல்பட்டு உள்ளது.

அதிர்ச்சி தகவல்கள்
சிறுமிகளுக்கு போலியான வயது சான்றிதழ், பாஸ்போர்ட் என அனைத்தையும் பெற்று, சிறுமிகளை அரபு நாட்டவர்களுடன் அனுப்பி வைக்கும் வரையில் அனைத்து வேலையையும் இந்த புரோக்கர்கள் பார்க்கிறார்கள். அரபு நாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து சிறுமிகளுடன் தங்குவதற்கும் வீடுகளையும், ஓட்டல்களையும் ஏற்பாடு செய்கின்றனர் எனவும் தெரியவந்து உள்ளது. இதுதொடர்பான விசாரணையில் மேலும் அதிர்ச்சி சம்பவங்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்பந்த திருமணங்கள்
மேலை நாடுகளை பொருத்தவரை திருமணம் உறவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பிடித்தால் சேர்ந்து வாழ்வதும் பிடிக்காவிட்டால் மற்றொரு நபரை தேடிச் செல்வதும் சர்வசாதரணமான விசயம் ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை திருமண உறவில் இந்த பழக்கவழக்கங்கள் இருந்தாலும், பெரும்பாலாக நடப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவின் ஹைதராபாத்தில் தான் ஒப்பந்த திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன.

தெரிந்தே குழியில் விழும் பெண்கள்
ஒப்பந்த திருமணத்தில் ஏழைப்பெண்கள் ஏமாறுகின்றனர் என்று சொன்னாலும், சில குடும்பங்கள் இந்த திருமணம் பற்றிய விசயங்கள் தெரிந்திருந்தும் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். அன்றாடம் பிழைப்பு நடத்த கஷ்டப்படும் குடும்ப சூழலில் வாழும் பெண்கள், கொஞ்ச நாளைக்காவது பணக்கார வாழ்க்கையும், குடும்பத்திற்கு பண உதவி கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் இந்த திருமணத்தை செய்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications