காஷ்மீரில் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் போலீஸ் அதிகாரி மாயம்: தேடும் பணி தீவிரம்
காஷ்மீர்: தெற்கு காஷ்மீரில் 4 ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் போலீஸ் அதிகாரி மாயமானதைத் தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
துணை சூப்பிரண்டு போலீஸ் அதிகாரிக்கு பர்சனல் செக்யூரிட்டி ஆபிஸராக பணிபுரிந்து வந்த சாகூர் அகமது துப்பாக்கி குண்டுகள் அடங்கிய 13 மேகசைன் மற்றும் 4 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் மாயமாகிவிட்டார். இவர் தெற்கு காஷ்மீரில் தீவிரவாத கும்பலுடன் இணைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தெற்கு காஷ்மீரில் பிஜ்பெகரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த சாகூர் அகமது கடந்த இரண்டு நாட்களாக தனது பணி குறித்த எந்த ரிப்போர்ட்டையும் மேலதிகாரிக்கு தெரிவிக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் விசாரித்த போது அவர்களும் தனது மகன் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் கடந்த சில நாட்களாக காணவில்லை என தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக ஆயுதங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க துவங்கினர். அப்போது, 4 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு மேகசைனுக்கு 30 குண்டுகள் வீதம் அடங்கிய 13 மேகசைன்களும் மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மாயமான போலீஸ் அதிகாரி சாகூர் அகமதை தேடும் பணியைத் தீவிரபடுத்தியுள்ளது காஷ்மீர் போலீஸ்.












Click it and Unblock the Notifications