சல்மான் கான் தங்கை அளித்த பார்ட்டியில் போலீசார் ரெய்டு: ரூ.12,500 அபராதம்
மும்பை: மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் வீட்டில் நடந்த பார்ட்டியின்போது போலீசார் அதிரடி சோதனை நடத்தி மியூசிக் சிஸ்டத்தை பறிமுதல் செய்து ரூ. 12 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார். பார்ட்டியில் அந்த தெருவுக்கே கேட்கும் அளவுக்கு பாட்டு போட்டு டான்ஸ் ஆடினர். இரவு நேரத்தில் அர்பிதா வீட்டில் இருந்து வந்த சப்தத்தால் அக்கம்பக்கத்தினரால் தூங்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் அதிகாலை 2.30 மணிக்கு கார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் அர்பிதாவின் வீட்டிற்கு வந்து பாட்டை நிறுத்துமாறு கூறினர்.
மியூசிக் சிஸ்டத்தை பறிமுதல் செய்த போலீசார் பார்ட்டி ஏற்பாட்டாளரான சந்தோஷ் மனேவுக்கு ரூ.12, ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். சந்தோஷ் கார் காவல் நிலையத்திற்கு சென்று அபராதம் செலுத்தினார். அதன் பிறகு மியூசிக் சிஸ்டம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மும்பையில் பிரபலம் ஒருவரின் வீட்டில் நடந்த பார்ட்டியின்போது போலீசார் சோதனை நடத்தியது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.