லாக்டவுன் நடைபயண துயரம்... போலீஸுக்கு பயந்து பயங்கர பள்ளத்தாக்கில் சிக்கிய உ.பி. தொழிலாளர்கள் மீட்பு
நாசிக்: லாக்டவுன் காலத்தில் சிக்கிக் கொண்ட பிற மாநில தொழிலாளர்களின் துயரங்கள் சொல்லி தீராதவை. மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி கால்நடையாக பயணித்த 4 தொழிலாளர்கள் பேராபத்தில் இருந்து மீண்டதை சொல்கிறது இச்செய்தி.
லாக்டவுன்... இந்திய சமூகம் இதுவரை அனுபவிக்காத பெருந்துயரம். 5 வாரங்களாக லாக்டவுன் நீடிக்கிறது. சொந்த மண்ணில் லாக்டவுனை மீறும் சேட்டைக்கார கோஷ்டிகள் ஒருபக்கம்.

இன்னொருபக்கம் சொந்த மண்ணை விட்டு மொழி புரியாத மண்ணில் பிறரது உதவியை மட்டுமே நம்பி உயிரை கையில் பிடித்து கொண்டு வாழும் அன்றாடங்காய்ச்சிகள்... இந்த கொடுமையை தாங்க முடியாது என்று உணர்ந்து எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவானாலும் நடந்தே சொந்த மண்ணுக்கு பயணித்தவர்கள் பல்லாயிரம்.
அப்படித்தான் மகாராஷ்டிராவில் தானே பகுதியில் குடோன் ஒன்றில் பணிபுரிந்த உத்தரப்பிரதேச தொழிலாளர்கள், உரிமையாளரால் கைவிடப்பட்டனர். இதனால் வேறுவழியே இல்லாமல் மகாராஷ்டிராவில் இருந்து 1,500 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப்பிரதேசத்துக்கு நடைபயணத்தை தொடர்ந்தனர்.
வழியில் போலீஸ் சோதனை சாவடியை கண்டதும் அச்சப்பட்ட கூலி தொழிலாளர்கள் நள்ளிரவு நேரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் பதுங்கினர். அப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர் தாங்கள் சிக்கியிருப்பது பயங்கர பள்ளத்தாக்கு ஒன்றில் என்பது. வேறுவழியே இல்லாமல் அவசர உதவி எண் 100-ல் தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை சொல்லி கதறி இருக்கின்றனர்.
வனாந்திரத்தில் எங்கே இவர்களை தேடுவது? பல்வேறு தொடர் முயற்சிகளுக்கு பின்னர் மரணத்தின் பிடிக்குப் போன 4 அப்பாவி உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மீட்கப்பட்டு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் அந்த 4 தொழிலாளர்களும்!












Click it and Unblock the Notifications