வாடகைக்கு குடியிருப்போர் இருவருக்கு கொரோனா.. வீட்டுக்குள் வைத்து பூட்டிய ஓனர்.. போலீஸார் எச்சரிக்கை
குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டதும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டுக்குள் வைத்து உரிமையாளர் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை போலீஸார் மீட்டனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை போல சில மக்களின் மூளைகளும் நாளுக்கு நாள் மங்கி வருகிறது. அதன் பாதிப்புதான் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வோரை வீட்டை காலி செய்ய சொல்வது, வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பது உள்ளிட்ட கொடூரங்கள் ஏற்படுகின்றன.
ஆந்திராவில் ஒரு படி மேலே போய் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இளைஞருக்கு கொரோனா
குண்டூர் மாவட்டம் சட்டெனபள்ளியில் 28 வயது இளைஞருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதை அறிந்த அந்த நபர் வீட்டு உரிமையாளரிடம் சென்று தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தெரிவித்தார். தங்களுக்கு கொரோனா என தெரிந்தால் மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சொல்லி வைத்தார்.

வீட்டு உரிமையாளர்
ஆனால் அந்த ஹவுஸ் ஓனரோ மூர்க்கக் குணம் கொண்டவர் போல. கொரோனா பாதிப்பு குறித்து கூறிய இளைஞரை பின்தொடர்ந்த அந்த வீட்டு உரிமையாளர் அவரையும், அவரது தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்ட ஆயத்தமானார். வீட்டுக்குள் இருந்த அந்த இளைஞர், கதவை திறந்து விடுங்கள். ஏதேனும் அவசரம் என்றால் நாங்கள் என்ன செய்வது என கேட்டு மன்றாடினார்.

வீடியோ
ஆனால் சிறிதும் மனமிறங்காத ஓனர் வீட்டை பூட்டினார். உடனே அந்த சம்பவங்களை அந்த இளைஞர் வீடியோவாக எடுத்து உடனே போலீஸாருக்கு அனுப்பி வைத்தார். தகவலறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் இருவரையும் மீட்டனர்.

மன உளைச்சல்
பின்னர் வீட்டு உரிமையாளரை எச்சரித்ததுடன் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வீட்டு உரிமையாளர்கள் குறித்த தகவல்களை அரசுக்கு அளிக்குமாறு ஆந்திர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications