யாரும் கையில் எடுக்காத ஐடியா.. பிறமாநில தொழிலாளர்களுக்கு ஒடிசா கொடுத்த டாஸ்க்.. நவீன் பட்நாயக் செம!
ஒடிசாவில் தனிமை முகாம்களில் இருக்கும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு பயிற்சி கொடுத்து தூய்மை பணிகளில் ஈடுபட வைத்துள்ளது.
புவனேஷ்வர்: ஒடிசாவில் தனிமை முகாம்களில் இருக்கும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு பயிற்சி கொடுத்து தூய்மை பணிகளில் ஈடுபட வைத்துள்ளது.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஒடிசா பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. ஒடிசாவில் மொத்தம் 414 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 85 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். 3 பேர் தான் அங்கு பலியாகி உள்ளனர்.
மீதம் இருக்கும் 326 பேர் நல்ல உடல் நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அண்டை மாநிலங்கள் எல்லாம் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கவில்லை.

ஒடிசா சிறப்பு
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணியில் ஒடிசா மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கிறது. கேரளாவிற்கு இணையாக ஒடிசாவில் தடுப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஒடிசாவில் தற்போது பல பிற மாநில தொழிலாளர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தனிமை முகாம்களில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒடிசாவில் தற்போது வேலை இல்லை, சொந்த ஊர்களுக்கு சென்றாலும் பிழைக்க வழியில்லை.

முகாம்களில் உள்ளனர்
இதனால் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கும் செல்ல விருப்பம் இல்லாமல் தனிமை முகாம்களில் உள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் ஐடியாவை அம்மாநில அரசு கையில் எடுத்து உள்ளது. அதன்படி ஒடிசாவில் தனிமை முகாம்களில் இருக்கும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு பயிற்சி கொடுத்து தூய்மை பணிகளில் ஈடுபட வைத்துள்ளது.

சிறப்பு பயிற்சி அளிக்கிறது
இதற்காக அங்கிருக்கும் பிற மாநில தொழிலாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை உணவுக்கு பின் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த அடிப்படை விஷயங்கள் கற்றுத்தரப்படும். இந்த வைரஸ் எப்படி பரவும், எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுத்தரப்படும். தற்போது மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கற்றுத்தரப்படுகிறது .

கிளாஸ் எடுக்கிறார்கள்
அதேபோல் கை கழுவுதல் எப்படி, சமூக இடைவெளி ஏன் அவசியம் என்றும் கற்றுத்தரப்படுகிறது. சத்தான உணவுகளை உண்பது எப்படி என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களை சுத்தம் செய்வது எப்படி, அதன் முக்கியத்துவம், அவசியம் என்ன என்றும் முக்கியமான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தற்போது சுகாதார பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பணிகள் செய்கிறார்கள்
இவர்களுக்கு ஒடிசாவில் பல்வேறு இடங்களில் சுகாதார பணிகள் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . இதற்கான தினசரி சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒடிசாவில் உள்ள பிற மாநில தொழிலாளர்கள் கொரோனா லாக்டவுனுக்கு இடையிலும் உணவு தேவைக்கு சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், பேருந்துகளை சுத்தம் செய்யும் பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

செம பிளான்
அதேபோல் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களையும் இவர்கள் சுத்தம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தினசரி மருத்துவ சோதனை செய்யப்படுகிறது. எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியா முழுக்க வெளிமாநில தொழிலாளர்கள் உணவு இன்றி கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒடிசா மாநில அரசு அவர்களுக்கு உணவும் கொடுத்து, வேலையும் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications