டெல்லி சட்டசபை தேர்தல்: 67 இடங்களைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி! பாஜக- 3; காங்கிரஸுக்கு 'முட்டை'!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வகையில் 67 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ 3 தொகுதிகளில் மட்டுமே வென்று மரண அடியை வாங்கி உள்ளது. 3 தொகுதிகளையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு வெறும் "முட்டை"தான் கிடைத்துள்ளது.

டெல்லியில் கடந்த 2013 இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களை பிடித்த காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்காக முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விலகினார்.
இதன் பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அத்துடன் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் சட்டசபை கலைக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

இம்முறை ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சியினர் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினர். மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதாவும் தீவிரம் காட்டியது.
இருப்பினும் தொடர்ந்து வந்த கருத்து கணிப்புகள் பலவும் இம்முறை ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தன. டெல்லியில் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர்.
டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி தொகுதியில் அதிகபட்சமாக 18 பேர் போட்டியிட்டனர். தெற்கு டெல்லியில் அம்பேத்கர் நகர் தொகுதியில் குறைந்தபட்சமாக 4 பேர் போட்டியிட்டனர்.

பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி கிருஷ்ணா நகர், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் களம் கண்டனர். அதே போல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய்மக்கான சதார் பஜார் தொகுதியில் போட்டியிட்டார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்டா முகர்ஜி கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டார். டெல்லியில் இம்முறை வரலாறு காணாத வகையில் 67% வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் ஆம் ஆத்மிக்கு சாதகமாகவே இருந்தது.
இதனால் டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டெல்லி முழுவதும் உள்ள 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.
முதல் அரை மணிநேரத்தில் ஆம் ஆத்மியுடன் பாரதிய ஜனதா மல்லுக்கட்டும் என்ற நிலை இருந்தது. பின்னர் நிலைமை தலைகீழானது. ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வேண்டிய 36 இடங்களைத் தாண்டி 40, 50 என்று பாய்ச்சல் கண்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் 60 இடங்களைத் தாண்டியது ஆம் ஆத்மி கட்சி. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஆம் ஆத்மியுடன் மல்லுக்கட்டும் நிலையில் இருந்த பாரதிய ஜனதாவுக்கு நேரம் நேரம் செல்ல பலத்த அதிர்ச்சிதான் காத்திருந்தது.
பிற்பகல் அளவில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் முன்னிலை வகிக்க பாரதிய ஜனதாவோ 3 இடங்களில்தான் முன்னிலை என்ற நிலை இருந்தது. 3 இடங்களிலாவது தொடக்கத்தில் முன்னிலை வகித்த காங்கிரஸ் வெறும் முட்டைதான் வாங்கியது.
அனைத்து முடிவுகளும் மாலைக்குள் வெளிவந்துவிட்டன. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

பாரதிய ஜனதா கட்சியால் 3 இடங்களைத்தான் கைப்பற்றி மரண அடி வாங்கியது. பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அஜய் மக்கான் ஆகியோர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர்.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் இருக்கும் நிலையில் கட்சிக்குப் புதிதாக வந்த கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அக்கட்சி மேலிடம் அறிவித்ததுதான் அக்கட்சிக்கு மரண அடி கிடைக்க காரணம் என்பது பாரதிய ஜனதாவினரின் குற்றச்சாட்டு.
லோக்சபா தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத காங்கிரஸ் தாம் 15 ஆண்டு காலம் ஆண்ட தலைநகர் டெல்லியில் ஒரு இடத்தைக் கூட பெற முடியாமல் வரலாறு காணாத படுகேவலமான தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications