'குஜராத்' மாதிரி என்று மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்: கன்னையா குமார்
அகமதாபாத்: குஜராத் மாதிரி என்ற பெயரில் நாட்டு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் என்று டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் குற்றம்சாட்டியுள்ளார்
குஜராத் மாநிலம் உனா நகரில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி தலித் இளைஞர்கள் 4 பேரை பசு பாதுகாவலர்கள் எனப்படும் கும்பல் அடித்து காயப்படுத்தியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னையா குமார், குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா பகுதிக்கு சென்றார். அங்கு தலித் அமைப்பினருடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
அப்போது கன்னையா குமார் கூறியதாவது: நான் இங்கு வந்த பிறகு குஜராத் மாதிரி என்ற பெயரில் நாட்டு மக்களை எப்படி முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மனு சித்தாத்தங்கள் ஜனநாயக குரல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
குஜராத் மாநிலத்திற்கு முதல் முறையாக வருகிறேன். குஜராத் மாநிலத்தில் உனா யாத்திரையில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். பத்திரிக்கை சந்திப்பு நடத்த அனுமதிக்காமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.