பாரதிய ஜனதா கட்சிக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டுள்ளது: ப.சிதம்பரம் நக்கல்
டெல்லி: பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியதை கிண்டலடிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தீபாவளியை முன்னிட்டு பாஜகவுக்குள் முதல் பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதை நடு காண்கிறது என்று கூறியுள்ளார்.
ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாம் முதல் பட்டாசு வெடிப்பதை பார்க்கிறோம். அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
இப்போது சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை பாஜக ஆதரிக்கிறது. இதே பாஜக முதன்முதலில் அன்னிய முதலீட்டை சில்லரை வணிகத்தில் அனுமதித்தபோது என்ன கூறியது?.
பிரதமர் மோடி முன் 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று தேர்தல் பிரச்சாரங்களை செய்து கொண்டு திரிவது அல்லது ஒழுங்காக பிரதமர் வேலையைப் பார்த்து நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைப்பது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், பிகார் தேர்தலின்போது பாஜக பணபலம் உட்பட எத்தகைய வளங்களைப் பயன்படுத்தியது என்பதை நான் அறிவேன். அப்படி இருந்தும் அந்தக் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிற கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
On the eve of Diwali, we are witnessing the first fireworks. No surprises there
— P. Chidambaram (@PChidambaram_IN) November 10, 2015
நிதிஷ் குமார் தெளிவான சிந்தனை கொண்டவர். அவர் மாநில அரசியலிலேயே கவனம் செலுத்து வாரா அல்லது தேசிய அரசியலில் ஈடுபடுவாரா என்பது குறித்து இப் போதே கூற முடியாது.
இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை இணைந்த கூட்டணி வெற்றிபெற்றதில் காங்கிரசின் பங்களிப்பு புறக்கணிக்கப்படக்கூடாது.
காங்கிரசின் ஆதரவில்லாமல் நிதிஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் ஒன்று சேர்ந்திருக்க முடியாது .
பிகார் தேர்தல் பிரசாரத்தின்போது மோடி பேசிய பேச்சு பிரதமர் பதவிக்கு உகந்தது அல்ல.
Mr Modi threw everything in his armoury into the Bihar elections. He threw in money, human resources, ads, invectives and innuendos
— P. Chidambaram (@PChidambaram_IN) November 8, 2015
தவறுகளை திருத்திக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னும்கூட நேரம் இருக்கிறது. எதிர்க்கட்சிகளை அரசு அரவணைத்துச் செல்ல வேண்டும்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசின் மனோபாவம் மாறுமேயானால், அதன் பலன் மாநிலங்களவையிலும் எதிரொலிக்கும்.
ஆனால், எதிர்க்கட்சிகளை தொடர்ந்து சீண்டுவதோடு, சகிப்புத்தன்மை விவகாரத்தை முன்வைத்து செயற்கையான போராட்டங்களை நடத்துவார்களேயானால் அரசுக்கான நெருக்கடி தொடரத்தான் செய்யும் என்றார் சிதம்பரம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என சோனியா காந்தி முடிவு செய்தால், நிச்சயமாக அடுத்த தலைவர் ராகுல் காந்திதான். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள் எந்தவிதக் குழப்பமும் கிடையாது. பிகாரில்மதச்சார்பற்ற மகா கூட்டணி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியும் காரணம் என்றார்.