தேசியக்கொடி ஏற்றாதவர்கள் மீது நாடு நம்பிக்கை வைக்காது- போட்டோ அனுப்பச்சொன்ன பாஜக தலைவர் புது விளக்கம்
டேராடூன் : வீடுகளில் தேசியக்கொடி ஏற்றாதவர்களின் புகைப்படங்களை எடுத்து எனக்கு அனுப்புங்கள் என உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் தெரிவித்திருந்தது எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைச் சந்தித்தது.
இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மகேந்திர பட், நான் பாஜக தொண்டர்களின் வீடுகளில் தான் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று கூறினேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்கள் மீது, இந்த நாடும், நாட்டு மக்களும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் என்றும் மகேந்திர பட் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேசியக்கொடி ஏற்றாதவர்கள் மீது பாஜகவினர் வெறுப்பைக் கக்கும் வகையில் பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
செங்கோட்டையில் பிரதமர் சிறப்புரை; பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்திய டெல்லி காவல்துறை
பிரதமர் மோடி அழைப்பு
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், வீடுகளில் தேசியக்கொடி ஏற்றாதவர்களின் புகைப்படங்களை தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டார்.
போட்டோ எடுத்து எனக்கு அனுப்புங்கள்
மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றவில்லை என்றால் மக்களின் தேசியம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றாத வீடுகளின் உரிமையாளர்களை மக்கள் எப்படி நம்புவார்கள்? வீடுகளில் தேசியக் கொடி ஏற்றாதவர்களின் புகைப்படங்களை எடுத்து எனக்கு அனுப்புங்கள். இதன்மூலம், யாருக்கெல்லாம் தேசப்பற்று உள்ளதென்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
பாஜக தொண்டர்களுக்கு
பாஜக தலைவரின் இத்தகைய உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக உத்தரகாண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் விளக்கமளித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள அவர், "நான் பாஜக தொண்டர்களின் வீடுகளில் தான் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று சொல்லியிருந்தேன். பொதுமக்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.
யாரும் தயங்க மாட்டார்கள்
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பாஜக கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறியிருந்தேன். இருப்பினும், இந்த நாட்டின் மீது பற்று, உணர்வு கொண்ட எவரும், தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற தயங்க மாட்டார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
நம்பிக்கை வைக்க மாட்டார்கள்
ஆனால், சில அரசியல் கட்சியினர், இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளனர். சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. வீடுகளில் தேசியக்கொடி ஏற்றாதவர்கள் மீது இந்த நாடும், நாட்டு மக்களும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்." என்று விளக்கமளித்துள்ளார்.