வன்முறையில்லா பகுதிகளில் மொபைல் இன்டர்நெட் சேவை! மணிப்பூர் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இம்பால்: மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த சேவை இன்றுடன் முடிவடையும் நிலையில், வன்முறை இல்லாத பகுதிகளுக்கு மீண்டும் இன்டர்நெட் சேவையை வழங்க மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் வெடித்த வன்முறை 6 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 180க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இப்படி இருக்கையில் பதற்றம் மேலும் பரவாமல் தவிர்க்க மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்படுவதாக மணிப்பூர் அரசு அறிவித்தது. மே மாதம் துண்டிக்கப்பட்ட நெட்வொர்க் சேவை ஜூலை மாதத்தில் ஓரளவு கிடைத்தது. பின்னர் மீண்டும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 1ம் தேதி மணிப்பூர் ரைபிள்ஸ் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல போலியான தகவல்கள் பரவுவதாக கூறி மாநில அரசு நவ.28ம் தேதி அதாவது இன்று வரை மொபைல் இன்டர்நெட் சேவையை துண்டித்தது.
இந்நிலையில் இது குறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வன்முறை இல்லாத பகுதிகளில் சோதனை முறையில் மொபைல் இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே இன்று முதல் மீண்டும் நெட்வொர்க் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications