முதுபெரும் இடதுசாரித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்
கொல்கத்தா: முதுபெரும் இடதுசாரி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா (வயது 83) உடல்நலக் குறைவால் இன்று கொல்கத்தாவில் காலமானார்.
மேற்கு வங்கத்தில் 1936-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி பிறந்தவர் குருதாஸ் தாஸ்குப்தா . இளமைக் காலம் முதல் கம்யூனிசகொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இடதுசாரி இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார்.

1985-ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார். 2001-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சியின் அகில இந்திய பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டார் குருதாஸ் தாஸ்குப்தா .
2009, 2014 லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு அவர் எம்.பி.யானார். இவர் லோக்சபா எம்.பி.யாக பதவி வகித்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குருதாஸ் தாஸ்குப்தா, இன்று சிகிச்சை பலனின்றி கொல்கத்தாவில் காலமானார். அவரது மறைக்கு பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications