மே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்சியின் பல்வேறு குழுக்களில் இளம் நிர்வாகிகளுக்கு வழிவிட்டு மூத்த தலைவர்கள் பதவி விலகி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 1977-ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுமுன்னணி ஆட்சியில் இருந்தது. ஆனால் கடந்த சில தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் இருப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.
2019 லோக்சபா தேர்தலில் அம்மாநிலத்தில் 42 தொகுதிகளில் 40-ல் டெபாசிட்டை பறிகொடுத்தனர் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியை கைப்பற்றத் துடிக்கும் பாஜகவும் இடதுசாரிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.
இதனால் மார்க்சிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொல்கத்தாவில் நடைபெற்றும் அம்மாநில குழு கூட்டத்தில் பல்வேறு குழுக்களில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவர்கள் வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கவுதம் தேப், மானாப் முகர்ஜி, தீபக் தாஸ்குபா மற்றும் நிருபன் செளத்ரி உள்ளிட்டோர் மாநில குழுவில் இருந்து பதவி விலகி உள்ளனர். இவர்களுக்குப் பதிலாக இளம் நிர்வாகிகளான கல்லோல் மஜூம்தார், பாலாஷ் தாஸ், சுமித் தே உள்ளிட்டோர் மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஜனநாயக வாலிபர் சங்கர், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் பல்வேறு குழுக்களில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர், மூத்தவர்களை மாற்றிவிட்டு கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இது கட்சியை பலப்படுத்தும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மாற்றம் ஒன்றே மாறாதது!