வரலாற்று ஆவணங்கள் அழிப்பு விவகாரத்தில் முரண்பாடு ஏன்? பட்டியலை வெளியிடக் கோருகிறது மார்க்சிஸ்ட் கட்ச
டெல்லி: வரலாற்று ஆவணங்கள் அழிப்பு விவகாரத்தில் மத்திய அரசு ஏன் முரண்பட்ட நிலையை கடைபிடிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த உடன் உள்துறை அமைச்சகத்தில் இருந்த 1 லட்சம் கோப்புகள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி. ராஜீவ் பேசியதாவது:
கோப்புகளை அழிக்கும் விதி
கோப்புகளை அழிப்பதற்கு என்று ஒரு முறை உண்டு. அலுவலக நடைமுறை நூல் இதுதொடர்பாக 113ஆவது விதி தெள்ளத்தெளிவாக இருக்கிறது. 113(2)ஆவது விதியின்படி `ஏ' வகையினம் மற்றும் `பி' வகையினக் கோப்புகள் 25 ஆண்டுகள் கழிந்தபின், இந்திய தேசிய ஆவணக்காப்பகத்துடன் கலந்தாலோசனை செய்து, மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அழிக்கப்பட்ட கோப்புகள் எவை?
ஒன்றரை லட்சம் கோப்புகள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அமைச்சர் தன் அறிக்கையில் 11,100 கோப்புகள்தான் என்று கூறியிருக்கிறார். எப்படி இருந்தபோதிலும் சரி, அவற்றின் தகுநிலை அறிக்கையை அளித்திட அமைச்சர் தயாரா என்று கேட்க விரும்புகிறேன்.
விதிகள் பின்பற்றப்பட்டனவா?
மேலே கூறிய 113(2)ஆவது விதியின்கீழ் அழிக்கப்பட்ட கோப்புகள் அனைத்தும் 25 ஆண்டுகள் கழித்து மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனவா? அலுவலக நடைமுறை நூல் 29 மற்றும் 39ஆவது பிற்சேர்க்கைகளில் குறிப்பிட்டு சில விவர விளக்க வரைபடங்கள் இருக்கின்றன.
கோப்புகள் அழிக்க காரணம் என்ன?
அழிக்கப்படும் விவரங்கள் குறித்து எண், கோப்பின் பெயர், கோப்பின் தேதி, அழிப்பதற்கான காரணம் ஆகியவைத் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
அழிக்கப்பட்டவற்றின் பட்டியல் எங்கே?
இவ்வாறு இந்த அலுவலக நடைமுறை நூலின் விதிகளின்படி கோப்புகள் அழிக்கப்பட்டிருப்பின் அவற்றின் முழுமையான பட்டியல் அமைச்சரிடம் இருக்க வேண்டும். அவ்வாறு அழிக்கப்பட்ட கோப்புகளின் பட்டியலை அவையில் தாக்கல் செய்திட அமைச்சரும் இந்த அரசும் தயாரா ? என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு ராஜீவ் பேசினார்.
யெச்சூரி கேள்விகள்
இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
முதலாவதாக, இப்பிரச்சனை எழுப்பப்பட்டது 2014 ஜூலை 9 அன்று. அதற்கு, அமைச்சரிடமிருந்து பதிலையும் நாம் பெற்றிருக்கிறோம். அன்றையதினம் அமைச்சர் "அரசாங்கம் உறுப்பினரின் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறது,'' என்றார். அன்றைய தினம் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் அவ்வாறுதான் பதிலளித்தார்.
அழிக்கப்பட்டதா? இல்லையா?
ஆனால் இப்போது உள்துறை அமைச்சர் அளித்துள்ள அறிக்கையில், "பிரதமர் அனைத்து செயலாளர்களுடனும் விவாதம் நடத்தியதாகவும், அதன்பின்னர் கோப்புகளையும், தாள்களையும் பதிவுருக்கள் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு ஒழித்துக்கட்டப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். இவ்வாறு அழிக்கப்படும் நடவடிக்கை மூன்று நான்கு வாரங்களில் முடிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏன் இந்த முரண்?
ஒருஅமைச்சர் மேலும், "உள்துறைஅமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழும் இருந்த கோப்புகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மொத்தம் 11 ஆயிரத்து 100 கோப்புகள் 2014 ஜூன் 5 முதல் ஜூலை 8 வரையிலானதேதிகளில் அழிக்கப்பட்டன.''என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கோப்புகள் எதுவுமே அழிக்கப்படவில்லை என்று கூறுகிறார். உள்துறை அமைச்சரோ 11 ஆயிரத்து 100 கோப்புகள் அழிக்கப்பட்டிருப்பதாக இப்போது கூறிக் கொண்டிருக்கிறார்.
அவையை திசை திருப்பினீர்களா?
அப்படியானால் அமைச்சர் 9ஆம் தேதி கூறியவை இந்த அவையைத் திசைதிருப்பியதாக ஆகாதா? இவ்வாறு அரசு முன்னுக்குப்பின் முரணாக அவையில் கூறியிருப்பது அவையின் உரிமையை மீறியது ஆகாதா?
45 செகன்ட்டில் கோப்பு அழிப்பு
இது தொடர்பாக அவை முடிவு எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, 11 ஆயிரத்து 100 கோப்புகளை 15 வேலை நாட்களில் அழித்திருக்கிறீர்கள். அதாவது ஒவ்வொரு கோப்பையும் 45 விநாடிகளில் அழித்திருக்கிறீர்கள். இது எதைக்காட்டுகிறது?
ஆவண காப்பகத்தில் வைக்கலாமே..
இங்கேதான் சந்தேகம் எழுகின்றன. எந்தவொரு நாடாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தங்கள் நாட்டின் வரலாறு சம்பந்தப்பட்ட பழைய கோப்புகளை தங்கள் நாட்டில் உள்ள ஆவணக் காப்பகங்களில் வைப்பதுதான் வழக்கம்.
பாதுகாப்பு அவசியம்
ஆனால் நம் நாட்டில் இது தொடர்பாக முறையான கொள்கை எதுவும் இல்லை. நம் நாட்டில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் மொகலாய சாம்ராஜ்ஜியம் சம்பந்தப்பட்ட பதிவுருக்களைக் காண முடியும், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் சம்பந்தப்பட்ட பதிவுருக்களைக் காண முடியும். ஆனால், சுதந்திர இந்தியாவின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள முடியாது. இது ஒரு மிகப்பெரியகுறைபாடாகும். இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். நம்முடைய நாட்டின் வரலாறு போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்
இவ்வாறு யெச்சூரி பேசினார்.