கேரளா: சி.பி.எம். மாநில மாநாட்டில் அச்சுதானந்தன் வெளிநடப்பால் சலசலப்பு!!
ஆழப்புழா: கேரளா மாநிலம் ஆழப்புழாவில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன் வெளிநடப்பு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆழப்புழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் மாநாட்டில் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டார்.

இம் மாநாட்டில் மாநில செயலாலர் பினராய் விஜயன், மூத்த தலைவர்கள் கொடியேறி பாலகிருஷ்ணன்,வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாநில செயலாளர் பினராய் விஜயன் தாக்கல் செய்த கட்சியின் செயல்பாடு குறித்த அறிக்கையில் அச்சுதானந்தன் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்வதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. கட்சி விரோத சக்திகளை அச்சுதானந்தன் தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறார் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கண்ணூர், கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட் நிர்வாகிகளும் அச்சுதானந்தன் மீது அடுக்கடுக்கான புகார்களை சுமத்தினர். இதனைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களிடம் தாம் மாநாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அச்சுதானந்தன் கூறினார்.
மேலும் தம் மீதான தாக்குதல்களை கட்சி மேலிடத் தலைவர்கள் தடுப்பார்கள் என்றும் அச்சுதானந்தன் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அச்சுதானந்தன் மாநாட்டில் இருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு செய்தியாளர்களையும் சந்திக்க அச்சுதானந்தன் மறுத்துவிட்டார்.
கட்சியின் மாநில மாநாட்டில் இருந்து அச்சுதானந்தன் வெளிநடப்பு செய்திருப்பது மார்க்சிஸ்ட் கட்சியினரிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications