பீடா கடைகளில் ஜோரா நடந்த கிரிக்கெட் சூதாட்டம்: 8 பேர் கைது, ரூ.14 லட்சம் பறிமுதல்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பீடா கடைகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் நகரில் உள்ள தூல்பேட், பேகம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பீடா கடைகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடைக்கு வரும் சூதாட்டக்காரர்களுக்கு பல விதிமுறைகள் உள்ளதாம்.
யாராவது புதிதாக ஒருவர் சூதாட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினால் அவரை பழைய வாடிக்கையாளர் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமாம். மேலும் சூதாட்டத்தில் பங்கேற்க ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை டெபாசிட் செய்ய வேண்டுமாம். பீடா கடைகளில் ஹாமில்டன் நகரில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் பற்றியும் சூதாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தியா வெற்றி பெற்றால் செலுத்திய தொகை 2 மடங்காக திருப்பிக் கொடுக்கப்படும் என்றும், அயர்லாந்து வெற்றி பெற்றால் அந்த தொகை 5 மடங்காக திருப்பிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓவர்களில் அடிக்கப்படும் ரன்கள், வீரர்கள் 50, 100 ரன்கள் எடுப்பது பற்றியும் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் பெரிய தொகைகள் கைமாறியுள்ளது.
இந்நிலையில் தான் போலீசார் பீடா கடைகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடத்திய சுப்பிரமணியம் என்கிற முக்கிய நபர் உள்பட 8 பேரை புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 14 லட்சம் ரொக்கம், செல்போன்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.