முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்தார் பிரவீன் குமார்!
லக்னோ: வேகப் பந்து வீச்சாளர் பிரவீன் குமார் திடீரென அரசியலில் குதித்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சியில் அவர் சேர்ந்துள்ளார். அவர் உ.பி. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இந்திய அணியில் இடம் பெற்று ஆடியவர். தற்போது சுரேஷ் ரெய்னாவைக் கேப்டனாகக் கொண்ட குஜராத் லயன்ஸ் அணியில் இடம் பெற்று ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.

இந்திய அணியில் எதிர்காலத்தை இழந்து விட்ட பிரவீன் குமார் கடும் கோபக்காரர். அவரது கோபமான செயல் காரணமாக பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் இன்று சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்தார். லக்னோவில் முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
உ.பி சட்டசபைத் தேர்தலில் பிரவீன் குமார் போட்டியிடலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
பிரவீன் குமார் 6 டெஸ்ட் மற்றும் 68 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்களையும், ஒரு நாள் போட்டிகளில் 77 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications