வீடியோ கேம்போல் மணிப்பூரில் மக்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமல்
இம்பால்: மணிப்பூரில் நேற்று புத்தாண்டு அன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல் சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில், ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக பல்லத்தாக்கு பகுதிகளில் வாழும் மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து குகி பழங்குடிகள் நடத்திய போராட்டத்தின்போது மெய்திக்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்கள் தொடர்ந்த இந்த வன்முறையில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள். பல மாதங்களாக இணைய சேவை, தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மாநிலமே ஸ்தம்பித்தது.

உச்சக்கட்டமாக குகி சமூக பெண்கள் இருவரை மெய்தி இன வெறியர்கள் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்து சென்று கும்பலாக சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை சம்பவத்தை சுட்டிக்காட்டி அமளியில் ஈடுபட்டனர். அந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், "இது வெட்கக்கேடான சம்பவம். என் மனது வலிக்கிறது. குற்றவாளிகள் யாரும் தப்பமாட்டார்கள். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்த இந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது." என்றார்.
இந்த நிலையில் படிப்படியாக வன்முறை ஓய்ந்து அமைதியோடு இந்த புத்தாண்டை தொடங்குவோம் என் நினைத்த மணிப்பூர் மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது நேற்று அரங்கேறிய சம்பவம். மணிப்பூரில் தௌபால் மாவட்டத்தில் லில்லங் நங்காய் பகுதியில் அடையாளம் தெரியாத குண்டர்கள் சிலர் மாருது ஜிப்சியில் வந்து இறங்கி துப்பாக்கியால் 4 அப்பாவி மக்களை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பதிலுக்கு அப்பகுதி மக்கள் கொலையாளிகள் வந்த வாகனங்களை தீயிட்டு எரித்தனர்
ஆனால், கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். இந்த கொலைகளுக்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மணிப்பூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், அம்மாநில அரசு உடனடியாக இம்பால் மேற்கு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.
சுகாதார பணியாளர்கள், மின் ஊழியர்கள், பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நீதிமன்றங்கள், விமான நிலைய ஊழியர்கள் தவிர்த்து அனைவருக்கும் இந்த ஊரடங்கு செல்லும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications