சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து கட் அவுட்.. சனாதன தர்மத்தை அவமதித்து விட்டதாக பாஜக தாக்கு
ஐதராபாத்: தெலுங்கானாவில் சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து காங்கிரஸ் கட்சியினர் கட் அவுட் வைத்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு சனாதன தர்மத்தை அவமதித்துவிட்டதாகவும் சாடியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் முதல்வராக உள்ள சந்திர சேகர் ராவை வீழ்த்தி ஆட்சி அமைக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இதற்காக தெலுங்கானாவிற்கு பாஜக, காங்கிரஸ் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் அடிக்கடி விசிட் அடித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஐதரபாத் வருகை தந்தனர். சோனியா காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் பேனர்களையும் போஸ்டர்களையும் கட் அவுட்களையும் வைத்து இருந்தனர். குறிப்பாக சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது.
சோனியா காந்தியின் தலையில் கிரீடம், நகை அணிந்தபடி அம்மன் போலவே சித்தரித்து காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைத்து இருந்தனர். சோனியா காந்தியை தெலுங்கானா மாநிலத்தின் அன்னை எனவும் பெரிய அளவில் வாசகங்களை எழுதியிருந்தனர். சோனியா காந்தியை அம்மனாக சித்தரித்து கட் அவுட்கள் வைத்தற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநில பாஜக தலைவர் ஜி கிஷன் ரெட்டி இது குறித்து கூறியதாவது:- சோனியா காந்தியை தெலுங்கானாவின் அன்னை என சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவதிக்கும் செயலாகும். தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம தேவதை உள்ளது. பாரதம் முழுவதும் சக்தி, பெண்வடிவம் என பல்வேறு முறைகளில் வழிபாடுகள் நடக்கின்றன.
ஆனால், ஊழல் செய்த காங்கிரஸ் தலைவரை தெலுங்கானாவின் அன்னையாக சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவதிக்கும் செயல் ஆகும்" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் தற்போது தெலுங்கானாவின் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே வார்த்தை யுத்தத்திற்கு வித்திட்டுள்ளது.












Click it and Unblock the Notifications