ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு: நெருங்கும் கிளைமேக்ஸ்.. இன்னும் சில வாரங்களில் தீர்ப்பு!
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதை அடுத்து தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வக்கீல் அமித் தேசாய் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஆஜராக வாதிட்டு வந்தார்.

8 நாட்கள் வாதிட்ட அமீத் தேசாய்
இந்த நிலையில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் வக்கீல் அமித் தேசாய் கடைசி நாளாக நேற்று வாதிட்டார். அவர் மொத்தம் 8 நாட்கள் வாதிட்டு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். இந்த வழக்கில் தனது இறுதி வாதத்தின்போது, இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களின் பங்குதாரர்கள் மீது வழக்கு தொடரப்படாதது ஏன் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.

விடுவிக்கவேண்டும்
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே இந்த வழக்கு போடப்பட்டதாகக் குறிப்பிட்ட ஹமீத் தேசாய், சுதாகரன், இளவரசி ஆகிய இருவரும் நிரபராதிகள் என்றும், அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரின் இறுதி வாதமும் முடிவடைந்துவிட்டது.

எழுத்துப்பூர்வமாக
மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்கள், தங்கள் வாதத்தை எழுத்துப்பூர்வமாக நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

42 நாட்கள்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மொத்தம் 42 நாட்கள் இறுதி வாதம் நடைபெற்று உள்ளது.இதில் ஜெயலலிதா சார்பில் 25 நாட்களும், சசிகலா சார்பில் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரது சார்பில் 8 நாட்களும் இறுதி வாதம் நடந்தது.

கூடுதல் வாய்ப்பு
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட தனக்கு கூடுதலாக இரண்டரை மணி நேரம் வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதா வக்கீல் நீதிபதியிடம் முறையிட்டார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று (புதன்கிழமை) வாதிடுமாறு அவருக்கு உத்தரவிட்டார்.

அரசு தரப்பு வாதம்
அதைத்தொடர்ந்து அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் தனக்கு மேலும் 2 நாட்கள் ஒதுக்குமாறு கேட்டார். செப்டம்பர் 1மற்றும் 2ஆம் தேதிகளில் அவர் வாதிடுகிறார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு மொத்த விசாரணையும் நிறைவடைகிறது.

தீர்ப்பு நாளை எதிர்நோக்கி
17 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கு கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. செப்டம்பர் மாதத்தில் முதல்வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுவதால் திக்.. திக்.. மனநிலையில் உள்ளனர் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.












Click it and Unblock the Notifications