ராஜஸ்தானில் துர்க்கை அம்மனுக்கு ஆரத்தி எடுத்ததால் தாக்குதல்.. புத்த மதத்திற்கு மாறிய கிராம மக்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் துர்கை அம்மன் சிலைக்கு ஆரத்தி எடுத்ததற்காக ஆதி திராவிடர் சமூகதத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது குறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி தாக்குதலுக்குள்ளான இளைஞர்களின் கிராமத்தினர் குடும்பத்துடன் புத்த மதத்தை தழுவியுள்ளனர்.
தங்கள் வீடுகளிலிருந்த இந்து தெய்வங்களின் படங்கள் மற்றும் சிலைகளை ஆற்றில் கரைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவி வருகிறது.
காளான் பறிக்க தைலகாட்டிற்கு சென்ற இரு பெண்கள்.. முகம் சிதைத்து கொலை.. ஜெயங்கொண்டத்தில் அதிர்ச்சி
புகார்
ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தின் பூலோன் கிராமத்தில் கடந்த 5ம் தேதி துர்கை அம்மனுக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின் போது ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த ராஜேந்திரா மற்றும் ராம்ஹெத் ஏர்வால் ஆகியோர் அம்மனுக்கு ஆரத்தி எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சமூகத்தினர் இவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் தாக்குதல் சம்பவத்தில் யார் ஈடுபட்டனர் என்கிற விவரம் இடம்பெறவில்லை.
புத்த மதம்
புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருடன் கிராமத்தினர் ஒன்று சேர்ந்து பேரணி நடத்தினர். இந்த பேரணியில் தங்கள் வீடுகளிலிருந்த இந்து தெய்வங்களின் புகைப்படங்கள் மற்றும் சிலைகளை கையில் ஏந்தி சென்றுள்ளனர். பெத்லி ஆறு வரை பேரணியாக சென்ற அவர்கள் இந்து தெய்வங்களின் படங்கள் மற்றும் சிலைகளை ஆற்றில் கரைத்து புத்த மதத்தை தழுவினர். டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவியபோது எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழியையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர்.
விசாரணை
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாக்குதல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில் உட்கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பைர்வா மகாசபா யுவ மோர்ச்சாவின் தலைவர் பால்முகந்த் பைர்வா கூறியுள்ளார். முன்னதாக புத்த மதத்தை தழுவும் நிகழ்ச்சியும் இவர் தலைமையில்தான் நடைபெற்றது. சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், "தாக்குதல் சம்பவம் குறித்த புகாரில் குற்றவாளிகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது" என்று பூஜா நகர் டிஎஸ்பி கூறியுள்ளார்.
கர்நாடகாவில்
இதே போல சில தினங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிராமத்தினர் சிலர் தங்கள் வீடுகளிலிருந்த இந்து மத தெய்வங்களின் சிலைகளை அகற்றி புத்த மதத்திற்கு மாறினர். முன்னதாக அக்கிராமத்தில் இருந்த இந்து தெய்வத்தின் சிலையை தொட்டதாக கூறி ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியில் தெரிய வந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.