மொட்டை மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி 26 பேரை மீட்ட பைலட்.. 3 செகண்ட்ஸ் தாமதித்திருந்தால் சாம்பல்தான்!
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி தனது உயிரை பணயம் வைத்து 26 பேரை காப்பாற்றிய பைலட் ராஜ்குமார் உள்ளிட்ட இந்திய கடற்படையினருக்கு ஒரு சல்யூட்.
கேரளாவில் ஒரு நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை ஏற்பட்டது. இங்குள்ள மொத்த அணைகளும் நிரம்பி விட்டன. இதனால் நீர் திறக்கப்பட்டு 14 மாவட்டங்களையும் தண்ணீர் சூழ்ந்தது.
வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பெரும்பாலானோர் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர். முப்படையினருடன் சேர்ந்து மீனவர்களும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் லட்சக்கணக்கானோர் மீட்கப்பட்டனர்.
|
26 பேருக்கு உதவி
இதில் விமானப்படைக்கு சொந்தமான 42பி ஹெலிகாப்டரின் பைலட் ராஜ்குமார் செய்த சாகசம்தான் தற்போது வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சாலக்குடியில் ஒரு மொட்டை மாடியில் மூன்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர் உள்பட 26 பேர் மீட்புக்காக காத்திருந்தனர்.

ஏற இயலவில்லை
அப்போது அவர்கள் இருந்த இடத்தை சுற்றிலும் நிறைய தண்ணீர் சென்றதால் படகின் மூலமும் அவர்களை காப்பாற்ற முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து செய்வதறியாது திகைத்தனர். அப்போது அங்கு 42 பி ரக ஹெலிகாப்டர் சென்றது. 26 பேரும் வயதானவர்கள் என்பதால் ஹெலிகாப்டரில் ஏற இயலவில்லை.

மொட்டை மாடியில்
அந்த ஹெலிகாப்டரை பைலட் ராஜ்குமார் இயக்கினார். ராஜ்னீஷ் துணை பைலட்டாகவும், சத்தியார்த் வழிகாட்டும் நபராகவும், அஜித் என்பவர் விஞ்ச் ஆபரேட்டராகவும், தண்ணீரில் இறங்கி மீட்பவராக ராஜன் என்பவரும் உடனிருந்தனர். இதையடுத்து 26 பேரை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனது உயிரை பற்றி கவலைப்படாமல் குறுகலான மொட்டை மாடியில் ராஜ்குமார் ஹெலிகாப்டரை இறக்கினார்.

ஹீரோக்கள்
சுமார் 8 நிமிடங்களில் அவர்களை மீட்டுக் கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இது மிகவும் ரிஸ்கான காரியம் என்பதால் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இன்னும் 3 வினாடிகள் தாமதத்திருந்தால் ஹெலிகாப்டர் வெடித்திருக்கும். பிறகு 26 பேருடன் சேர்ந்து இந்த குழுவினரும் சாம்பலாகியிருப்பர். அந்த ரிஸ்க்கையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய இந்த மீட்பு குழுவினர் ஹீரோக்களாகிவிட்டனர்.

துணிச்சலுடன் நிறுத்திவிட்டேன்
இதுகுறித்து பைலட் ராஜ்குமார் கூறியதாவது: எங்களிடம் உதவி கேட்ட அத்தனை பேரும் வயதானவர்கள். அதில் ஒருவர் வீல்சேரில் வேறு அமர்ந்திருந்தார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. துணிச்சலுடன் வீட்டு மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி விட்டேன். 8 நிமிடம் அங்கு நிறுத்தி 26 பேரையும் மீட்டோம்.

நன்றி
இன்னும் 3 வினாடிகள் மட்டும் அங்கு நின்றிருந்தால் ஹெலிகாப்டர் வெடித்து சிதறியிருக்கலாம். ஆனால் நான் ஹெலிகாப்டரின் முழு எடையையும் வீட்டின் மேல் நிறுத்தவில்லை. பாதி பறந்த நிலையில்தான் ஹெலிகாப்டர் இருந்தது. ஆபத்தான முயற்சியாக இருந்தாலும் அத்தனை பேரையும் காப்பாற்ற நான் எடுத்தது சரியான முடிவு என்று தான் நினைக்கிறேன். இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என்றார் பைலட் ராஜ்குமார்.












Click it and Unblock the Notifications