திருமலையில் குவிந்த 3 லட்சம் பக்தர்கள்: சாமி தரிசனத்துக்கு 30 மணி நேரம்
திருமலை: திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க 3 லட்சம் பக்தர்கள் திரண்டதால் சுவாமி தரிசனம் செய்ய 30 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து உள்ளனர். கோடை விடுமுறை காலம் என்பதால் திருப்பதியில் கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் திருமலையில் காணப்பட்டது.
திரும்பிய திசையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக அதுவும் கால்நடையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
பிரமோற்சவ காலங்களை மிஞ்சும் வகையில் சனிக்கிழமை மட்டும் 3 லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்து இருந்தனர். ஞாயிறு காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 41,780 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
அதன் பிறகும் தர்ம தரிசன வரிசையில் 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. அவர்களுக்கு தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இது தவிர கோவிலுக்கு வெளியே 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அவர்களும் தரிசனத்துக்கு 44 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கால் நடையாக வந்த பக்தர்களை வரிசையில் நிற்க அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் ஆழ்வார் தீர்த்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவஸ்தானத்துக்கு எதிராக கோஷமிட்டனர். கோவில் அதிகாரிகளும் போலீசாரும் அவர்களை சமரசப்படுத்தினார்கள்.
தங்கும் அறைக்கும், லக்கேஜ் வைப்பதற்கும் பக்தர்கள் பல மணி நேரம் காத்து நின்றனர். தலைமுடி காணிக்கை செலுத்த 6 மணி நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சில இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் அதிகாரிகள் செய்தனர்.
சனிக்கிழமை காலை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பிரத்யேக பிரவேச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இலவச மற்றும் திவ்ய தரிசன பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர்.
இலவச தரிசனத்துக்கு சுமார் 30 மணி நேரம் ஆனது. தலைமுடி காணிக்கை செலுத்த 4 மணி நேரம் ஆனது. சனிக்கிழமை ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 3 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.