தாவூத் இப்ராஹிம் வெளிநாடு செல்ல உதவியது காங்கிரஸ்: பாஜக எம்.பி. பகீர் குற்றச்சாட்டு
மங்களூர்: நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் வெளிநாடு செல்ல விசா கொடுத்தது காங்கிரஸ் என்று கர்நாடக மாநில பாஜக எம்.பி நளின்குமார் கட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலோர கர்நாடக மாவட்டங்களில் தீவிர இந்துத்துவா ஆதரவாளராக அறியப்படுபவரும் பாஜக மக்களவை எம்.பியுமான நளின்குமார் கட்டீல், லலித் மோடி மற்றும் சுஷ்மாசுவராஜ் விவகாரம் குறித்து அளித்த பேட்டி:
சுஷ்மா சுவராஜ் விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திரமோடி கலந்து ஆலோசித்துவிட்டனர். அது முடிந்து போன விவகாரம்.

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புள்ள தாதா, தாவூத் இப்ராஹிமுக்கு விசா வழங்கி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் அரசுதான். இதுபோல பல முக்கிய வழக்குகளில் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் அதிகாரங்களை காண்பித்துள்ளனர். அவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு போனவர்கள்தான், திரும்பி வரவேயில்லை.
லலித் மோடி பிசினஸ் செய்வதற்கு சுஷ்மா உதவவில்லை. மனிதாபிமான அடிப்படையில்தான், வெளிநாடு செல்ல உதவினார். இந்த விஷயத்தில் லாலு பிரசாத் யாதவுக்கு இருக்கும் தெளிவு காங்கிரஸ்காரர்களுக்கு இல்லை. மத்தியில் அதிகாரத்தில் இல்லாத ஏமாற்றம் அவர்களை வாட்டுகிறது. எனவேதான் சாதாரண விஷயங்களை ஊதி பெரிதாக்குகின்றனர்.
சுஷ்மா சுவராஜ் விவகாரத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சனம் செய்துள்ளது துரதிருஷ்டவசமானது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட மத துவேஷ அமைப்புகளுக்கு எதிரான 1400 வழக்குகளை சித்தராமையா தள்ளுபடி செய்துள்ளார். வழக்குகளை வாபஸ் பெற்று சித்தராமையா பெரும் தவறு இழைத்துள்ளார். இவ்வாறு நளின் குமார் கட்டீல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications