கேஜ்ரிவால், கீர்த்தி ஆசாத் மீது அவதூறு வழக்கு தொடர டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லி, கடந்த 2013-ம் ஆண்டுவரை, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்தார். அப்போது, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக போலியாக பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், கேஜ்ரிவாலுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை கமிஷனை டெல்லி அரசு அமைத்துள்ளது. அதேபோல், கீர்த்தி ஆசாத்தும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிந்தர் மஞ்சாடா கூறுகையில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வரும் கேஜ்ரிவால் மற்றும் கீர்த்தி ஆசாத் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு குறித்து ஏற்கனவே, மூன்று அமைப்புகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. எனவே, புதிய கமிஷனின் விசாராணை தேவையில்லாத ஒன்று என தெரிவித்தார்.