அரசு ஊழியர் சாவுக்கு காரணம் என குற்றம்சாட்டி பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்

கர்நாடக நிர்வாக பயிற்சி மையம் மைசூரில் உள்ளது. இதன் இயக்குநராகவும், மைசூர் மாவட்ட மண்டல கமிஷனராகவும் பணியாற்றுபவர் ரஷ்மி. இவரது அலுவலகத்தில் கெசட்டட் மானேஜராக வேலை பார்த்தவர் வெங்கடேஷ் (53).
நேற்று காலை 6 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த வெங்கடேஷ், காலை 8 மணியளவில் பயிற்சி மைய வளாகத்திலுள்ள நிலத்தடி நீர் தொட்டியில் பிணமாக மிதந்தபடி கண்டெடுக்கப்பட்டார்.
இவர் கால்தவறி விழுந்தாரா, தற்கொலை செய்துகொண்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மைசூர் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து நேற்று மதியம் வெங்கடேஷ் உடல் நிர்வாக பயிற்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ரஷ்மி மரியாதை செலுத்த வந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும், சூழ்ந்து கொண்ட வெங்கடேஷின் உறவினர்கள் அவரது கண்ணத்தில் அடித்தும், தள்ளியும் தாக்குதல் நடத்தினர்.
ரஷ்மியின் உதவியாளராக வந்திருந்த கான்ஸ்டபிளால் இந்த தாக்குதலை முழுமையாக தடுக்க முடியவில்லை. இருப்பினும் விடாப்பிடியாக வெங்கடேஷின் உடலை பார்த்து மரியாதை செலுத்திய பிறகே ரஷ்மி திரும்பினார்.
வெங்கடேஷின் மனைவி மஞ்சுளா கூறுகையில், ரஷ்மி பணிநேரத்தில் கொடுத்த மன அழுத்தம்தான் கணவனின் தற்கொலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். இருப்பினும் இதை ரஷ்மி மறுத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீது நடந்த தாக்குதல் கர்நாடக அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications