இடுகாட்டில்.. புதைக்க போன பிணத்தின் தலை அசைந்ததால்.. தெறித்து ஓடிய மக்கள்!
இறந்ததாக நினைத்தவர் உயிரோடு வந்த அதிசயம் ஒடிசாவில் நடந்துள்ளது
Recommended Video
புவனேஸ்வர்: சுடுகாட்டில்.. புதைக்க போன நபரின் தலை லேசாக அசைந்ததால்.. மக்கள் தலைதெறித்து அடித்து கொண்டு ஓடினார்கள்.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பகல்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சிமானச் மாலிக். 55வயதாகிறது. இவர் ஆடு மேய்ப்பவர்.

2 நாளைக்கு முன்பு இவர் ஆடு மேய்க்க சென்ற மாலிக் திரும்பவும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது வீட்டில் இருந்தவர்கள், வழக்கமாக ஆடுகளை எங்கெல்லாம் மேய்ப்பாரோ அங்கெல்லாம் தேடி அலைந்தனர். அப்போதுதான், ஒரு இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார்.
ஆனால் இதை பார்த்ததும், மாலிக் இறந்துவிட்டதாக கூறி, குடும்பமே ஒன்று சேர்ந்து ஒப்பாரி வைத்தது. எல்லா சொந்தக்காரர்களுக்கும் சொல்லி அனுப்பியது. ஊரே திரண்டு வந்து மாலிக் உடலை பார்த்து கண்ணீர் சிந்தியது. பின்னர், மாலிக்குக்கு இறுதி சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மயானத்துக்கும் கண்ணீருடன் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போதுதான் குழிக்குள் வைக்கும்போது, மாலிக்கின் தலை சட்டென அசைந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பிறகு குடும்பத்தினர் மாலிக்கை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் செக் செய்து பார்த்தபோது, கடுமையான ஜூரத்தினால் மாலிக் இருந்துள்ளார் என்றும், அதனால்தான் உடல் பலவீனமாகி மயக்கம் போட்டு விழுந்துள்ளார் என்றும் சொன்னார்கள்.
இதையடுத்துதான் குடும்பத்தினர் முகத்தில் நிம்மதியே வந்தது. இன்னும் கொஞ்ச நேரம் ஆகியிருந்தால், மாலிக்கை மண்ணுக்குள் புதைத்தே இருப்பார்கள். கடைசி நிமிடங்களில் தலை இங்குமங்கும் அசையவும்தான் அவரை காப்பாற்றி இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications