மரண தண்டனையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை.. குற்றம் செய்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும்-அருண்ஜெட்லீ
டெல்லி : மரண தண்டனையை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், குற்றம் செய்தால், குற்றவாளி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் நேற்று (30-07-2015 ) அதிகாலை நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டான். கடைசி முயற்சியாக நள்ளிரவில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற கருணை மனு விசாரணையிலும் அவனது மனு தள்ளுபடி செய்யப்படடது.

யாகூப் தூக்கிலிடப்பட்டதை விமர்சித்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறி மத்திய அரசு நடத்தும் சீரியல் கொலை என கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது..
மும்பையில் நடந்த கலவரமும், தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களும் மன்னிக்க முடியாத பெருங்குற்றம். இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடையவன் தான் தூக்கு தண்டனை பெற்றான்.
இந்தியாவில் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அதை ஏன் நீக்க வேண்டும்? தூக்கு தண்டனையை நீக்கும் கேள்விக்கே இங்கு இடமில்லை.
இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. யாகூப் போன்ற தூக்கு தண்டனை குற்றவாளிகள் அதை சந்தித்தே ஆகவேண்டும். இதை காங்கிரஸ் விமர்சிப்பது தேவையில்லாத ஒன்று.
அவர்களின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இரு கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர். அப்போது அவர்கள் (காங்கிரஸ்) எங்கே சென்றனர்.
எனவே மரண தண்டனை இந்தியாவில் தொடர்ந்து அமலில் தான் இருக்கும் அதை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications