நிர்பயாவை சீரழித்த பாவிகளில் ஒருவர் பாதுகாப்புக்காக வேறு சிறைக்கு மாற்றம்
டெல்லி: நிர்பயாவை சீரழித்து, கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள 4 பேரில் ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக திஹாரில் உள்ள மூன்றாவது எண் கொண்ட பிரிவில் இருந்து 5வது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பிஸியோதெரபி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களில் ஒருவரான வினய் ஷர்மா திஹார் சிறையில் உள்ள மூன்றாம் எண் கொண்ட பிரிவில் இருக்கும் தன்னை சக கைதிகள் அடிக்கடி தாக்குவதாகக் கூறி தன்னை 5வது பிரிவுக்கு மாற்றுமாறு நீதிமன்றத்தை அணுகினார்.
இதையடுத்து அவர் 5வது பிரிவு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இருக்கும் இடத்தை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். வினய் முன்னதாக 5வது பிரிவு சிறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு போதிய தனி அறைகள் இல்லாததால் பாதுகாப்பு கருதி மூன்றாம் எண் கொண்ட சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா வழக்கில் அக்ஷய் தாகூர், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அந்த நான்கு பேரும் கொள்ளையடித்த வழக்கின் இறுதி வாதம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.