ஆற்றில் பிணமாக மிதந்த நடிகை ஷில்பாவின் காதலர் கேரளாவில் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலர் லிஜினை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா(19). பிளஸ் 2 படித்திருக்கும் அவர் தமிழ், மலையாள படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த 17ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
ஷில்பாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி ஷில்பா திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மருதூர் கடவு பாலம் அருகே பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் ஷில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஷில்பாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 17ம் தேதி ஷில்பாவுடன் வெளியே சென்ற அவரது புகைப்படக்காரரும், காதலருமான லிஜின் தலைமறைவானதை அறிந்தனர்.
இதையடுத்து லிஜினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஷில்பாவுடன் பணியாற்றிய நபர்கள், அவரின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் லிஜின் நேற்று காலை காட்டாக்கடையில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது நண்பர்களுடன் இருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் லிஜினை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஷில்பா எப்படி இறந்தார் என்ற தகவல் நிச்சயம் லிஜினிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.