தற்கொலை முயற்சி குற்றமல்ல: அரசு எப்படி இந்த திடீர் முடிவை எடுத்தது?
டெல்லி: தற்கொலை முயற்சி இனி குற்றமாக கருதப்படமாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. தற்கொலை முயற்சி குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவு 309ஐ மத்திய அரசு இன்று நீக்கியுள்ளது. பொருந்தாத சட்டம் என்று பலரும் விமர்சித்த நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

சட்டப்பிரிவு 309ல் என்ன உள்ளது?
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 309ன் படி தற்கொலைக்கு முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். தற்கொலைக்கு முயன்று சிக்குபவர்களுக்கு இந்த சட்டத்தின்படி ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

உதவி தேவை
சட்டப்பிரிவு 309ஐ நீக்கியதற்கு காரணம் அது இயற்கைக்கு பொருந்தாத சட்டமாக உள்ளதால் தான். இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டிலேயே பரிந்துரைக்கப்பட்டது. பொதுவாக தற்கொலை முயற்சி செய்பவர்கள் மனவேதனையில் தான் அவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு உதவி தேவை. ஆனால் சட்டமோ அவர்களின் துயரை அதிகரிப்பது போன்று தண்டனை வழங்கி வந்தது.

நல்லது
அரசின் முடிவு நல்லது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு தேவை உதவி தானே தவிர தண்டனை அல்ல. ஆங்கிலேயர் காலத்து தண்டனைகளை தொடர்ந்து அளித்து வரும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் திருத்தப்பட அல்லது நீக்கப்பட வேண்டும் என்று பலர் விவாதம் செய்து வருகிறார்கள்.
சட்ட கமிஷன் 2008ம் ஆண்டில் சமர்பித்த தனது 210வது அறிக்கையில் சட்டப்பிரிவு 309ஐ வாபஸ் பெறுமாறு பரிந்துரை செய்தது. ஏற்கனவே மன வேதனையில் இருக்கும் ஒருவருக்கு மேலும் வேதனை அளிக்கும் வகையில் தண்டனை அளிப்பது முறையல்ல என்று கமிஷன் தெரிவித்தது.

ஐரம் ஷர்மிளா
மணிப்பூரைச் சேர்ந்த ஐரம் ஷர்மிளாவுக்கு எதிராக சட்டப்பிரிவு 309ன்படி வழக்குப்பதிவு செய்தபோது போது தான் இந்த சட்டம் பற்றிய விவாதம் சூடுபிடித்தது. அவர் ராணுவ சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிராக 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது 309ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் பலருக்கு வசதியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications