மதச் சார்பின்மை, சோசலிசம் வார்த்தைகள் இடம்பெறாதது துரதிருஷ்டவசமானது: சமாஜ்வாடி கட்சி
லக்னோ: குடியரசு தினத்தையொட்டிய மத்திய அரசின் விளம்பரங்களில் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகள் இடம்பெறாத அரசியல் சாசனத்தின் முகப்புப் படம் அச்சிடப்பட்டிருந்தது துரதிருஷ்டவசமானது என்று சமாஜ்வாடி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசின் விளம்பரத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பின் முன்னுரையில் மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்படவில்லை. இது கவனக்குறைவால் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.
ஆனால் பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவோ, மத்திய அரசின் விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகள் கவனக்குறைவு காரணமாக சேர்க்கப்படவில்லை. இருப்பினும் இந்த விளம்பரத்தை வரவேற்பதாகவும் இந்த இரண்டு வார்த்தைகளையும் அரசியலமைப்பிலிருந்தே நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இது நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் சிவபால் யாதவ் லக்னோவில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து யோசிப்பது வருத்தத்துக்குரியது; துரதிருஷ்டவசமானது.
மத்திய அரசின் விளம்பரங்களில் இந்த வார்த்தைகள் இடம்பெறாததும் அதை சிவசேனா நிரந்தரமாக அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கக் கோருவதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
சோசலிச நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை இது அவமதிப்பதாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹரிபுரா மாநாட்டில் சோசலிச தேசம் அமைப்போம் என்றார்.
சந்திரசேக ஆசாத் அமைத்த ராணுவத்துக்கே ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் சோசலிஸ்ட் ஆர்மி என்பதுதான். பண்டித ஜவஹர்லால் நேருவும் அண்ணல் அம்பேத்கரும் சோசலிசத்துக்காக குரல் கொடுத்தவர்கள்.
சோசலிசம், மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை மத்திய அரசு நீக்கினால் அது சர்வதேசத்துக்கு தவறான ஒரு செய்தியையே வெளிப்படுத்தும். மகாத்மா காந்தியும் லோகியாவும் சோசலிச சமூகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சிவபால் யாதவ் கூறினார்.