வேலை தருவதாக கூறி பண மோசடி.. ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. மீது புகார்
டெல்லி: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக டெல்லி ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ சரிதா சிங் மீது புகார் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இது அப்பட்டமான அடிப்படை இல்லாத பொய்ப் புகார் என சரிதா சிங் தரப்பு மறுத்துள்ளது.
டெல்லி ரோத்தாஸ் நகர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சரிதா சிங். இவர் மீது ஷகீல் மற்றும் இருவர் வெல்கம் காவல் நிலையத்தில் ஒறு புகார் கொடுத்துள்ளனர். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தங்களிடம் ரூ. 9 லட்சம் வரை சரிதா சிங் வாங்கியுள்ளதாகவம், ஆனால் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ஏ.கே.சிங்லா கூறுகையில் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
இந்த நிலையில் இந்த விவகரம் குறித்து சரிதா சிங் கூறுகையில், ஷகீல் ஆம் ஆத்மியில்தான் இருந்தார். அவர் ஒரு மோசடிப் பேர்வழி எனது கையெழுத்தை தவறாகப் பயன்படுத்தி டூப்ளிகேட்டாக லெட்டர் பேடு தயாரித்து ரூ. ஏழரை லட்சம் வரை அவர் மோசடி செய்துள்ளார். இதற்காகவே அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ஆனால் தற்போது என் மீது அவர் பொய்ப் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து நானும் போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்.அதில் எனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஷகீல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன் என்றார் சரிதா சிங்.
மான் சரோவர் பூங்கா காவல் நிலையத்தில் ஷகீல் மீது புகார் கொடுத்துள்ளார் சரிதா சிங். இந்த இரு புகார்களாலும் டெல்லி அரசியல் களம் மீ்ண்டும் சூடாகியுள்ளது.