கிரிக்கெட் சங்க ஊழல்: ஒருநபர் விசாரணை கமிஷன்- டெல்லி அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்க டெல்லி மாநில அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி மாநில அரசு தலைமை செயலகம், முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகம் ஆகியவற்றில் அண்மையில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. டெல்லி முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகாரின் மீதான விசாரணையின் ஒருபகுதியே இந்த ரெய்டு என சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் கேஜ்ரிவாலோ, நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு தொடர்புடைய டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றத்தான் இந்த சோதனையை சி.பி.ஐ. நடத்தியதாக குற்றம்சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜேட்லி பதவி வகித்த காலத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
இதனிடையே டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து விசாரணை நடத்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் எனவும் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜேட்லி, கேஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது ரூ10 கோடி கேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் டெல்லி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான விசாரணை நடத்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications