சாலையில் கிடந்த பையில் ரூ. 8,00,000 மதிப்புள்ள நகை, பணம்... உரியவரிடம் ஒப்படைத்தது டெல்லி போலீஸ்
டெல்லி: சாலையோரத்தில் கிடந்த பையில் இருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை உரியவர்களிம் ஒப்படைத்து பாராட்டுகளை அள்ளி வருகிறார் டெல்லி போலீஸ்காரர் ஒருவர்.
டெல்லியில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் மன்சேஜ் சிங். நேற்றிரவு இவர் அஜ்மேரி கேட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையோரம் சந்தேகத்திற்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதை அவர் கண்டார்.

அந்த பையில் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் ஏதேனும் வைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தில் உடனடியாக அந்தப் பையை அவர் எடுத்து பார்த்தார்.
அப்போது அதில் ரொக்கப்பணமும், நகைகளும் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து மற்ற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அவர் தகவல் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கமலா மார்க்கெட் பகுதியில் துணிக்கடை வைத்துள்ள வியாபாரி ஒருவரின் கைப்பை நகை மற்றும் பணத்துடன் திருடப்பட்டது தெரியவந்தது.
இன்னும் சில வாரங்களில் அந்த வியாபாரியின் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகளை நேற்று அவர் வாங்கியுள்ளார். நகை மற்றும் மீதமிருந்த தொகை சுமார் ரூ. 7.5 லட்சத்தை ஒரு ஒரு பையில் வைத்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார் அந்த வியாபாரி.
அப்போது அவரது கவனத்தை திசை திருப்பி திருடர்கள் அவரிடமிருந்த பையை பிடுங்கிச் சென்றுள்ளனர். பையை சரிவர சோதிக்காத திருடர்கள் அதன் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 3.5 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, வெறும் பை எனக் கருதி அதனை தெருவில் தூக்கி வீசிச் சென்றுள்ளனர்.
அந்தப் பை தான் தற்போது மன்சேஜ் சிங்கின் கைகளில் கிடைத்தது. பின்னர் உரிய நடைமுறைகளைக்குப் பின் அந்த பையானது சம்பந்தப்பட்ட அந்த வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீசார் என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள் என்ற பிம்பத்தை உடைத்து, தெருவில் அனாதையாகக் கிடந்த பையில் இருந்த நகைகளையும், பணத்தையும் உரியவரிடம் ஒப்படைத்த மன்சேஜ் சிங்கின் நேர்மையை பொதுமக்களும், உயரதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications