ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களில் செய்யும் பிரார்த்தனை கடவுளிடம் சேருமா?.. டெல்லி நீதிமன்றம்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களில் செய்யும் பிரார்த்தனை கடவுளிடம் சேருமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
டெல்லி : முறையான அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கோவில்களில் மக்கள் செய்யும் பிரார்த்தனை கடவுளிடம் சென்று சேருமா என்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
டெல்லி கரோல் பார்க் அருகே நடைபாதையை ஆக்கிரமித்து 108 அடி உயர அனுமன் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதனால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சிலையையும், அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி அரசு சாரா அமைப்பு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தது.
இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் நீதிபதி ஹரிசங்கர், ஆகியோர் இன்று விசாரித்தனர். அதில், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் கோவில்களில் மக்கள் முன்வைக்கும் பிரார்த்தனைகள் கடவுளிடம் சென்று சேருமா? அத்தகைய கோவில்களின் புனிதம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், சிலையையும், அதனை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளையும் உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீர் செய்யுமாறு வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.