14 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய 45 வயது நபரை கொன்ற வீட்டு உரிமையாளர்
டெல்லி: டெல்லியில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கொலை செய்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜுரி காஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் சுரேஷ்(45, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுரேஷ் ராமின் 14 வயது மகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தார். இதை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் கர்ப்பத்திற்கு சுரேஷ் தான் காரணம் என்பதை அறிந்தார் ராம்.
ஆனால் சுரேஷ் அந்த சமயம் ஊரில் இல்லை. இந்நிலையில் ராம் தனது மகளின் கருவை கலைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுரேஷ் ஊரில் இருந்து வந்ததும் அவரிடம் இது பற்றி ராம் கேட்க அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராம் சுரேஷை கழுத்தை நெறித்துக் கொன்றார்.
அதன் பிறகு ராம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை தெரிவித்து சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.