கேட்டதும் டிபன் தரவில்லை... கோபத்தில் மனைவியை குத்திக் கொன்ற 25 வயது கணவன்
டெல்லி: காலை உணவை குறித்த நேரத்தில் பரிமாறவில்லை என்ற கோபத்தில் மனைவியை குத்தி கொலை செய்த கணவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த கவுதம் (25) என்பவரது மனைவி மஞ்சு(21). இவர் கடந்த செவ்வாயன்று தன் மனைவியிடம் காலை உணவு கேட்டுள்ளார்.
வீட்டு வேலையில் தீவிரமாக இருந்த மஞ்சு, சிறிது நேரம் கழித்து கணவருக்கு உணவை பரிமாறியுள்ளார். காலதாமதமாக உணவு தந்ததால் கோபமடைந்த கவுதம், சமையல் அறையில் இருந்த கத்தியால் மனைவியை குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்துள்ளார் மஞ்சு. எங்கே தான் கொலைக் குற்றத்தில் மாட்டிக் கொள்வோமோ என அஞ்சிய கவுதம் உடனடியாக மஞ்சுவை மாடியில் இருந்து கீழே தள்ளி தற்கொலையாக சித்தரிக்கப் பார்த்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தார் கவுதமைத் தடுத்துள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கவுதமை கைது செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரியான நேரத்தில் உணவு தராத மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.