'ஆம் ஆத்மி' சோம்நாத் பார்தியின் சித்ரவதை கொடுமை- மனைவிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு!!
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தியால் சித்ரவதைக்குள்ளான அவரது மனைவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க டெல்லி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவுமான சோம்நாத் பார்தி மீது அவரது மனைவி லிபிகா டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.
கணவரால் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாக கண்ணீர் மல்க கூறிய அவர், சோம்நாத் பார்தியும் அவரது ஆதரவாளர்களும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து லிபிகாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க டெல்லி மாநகர காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாசி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பி.எஸ்.பாசி செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி தெரிவித்துள்ளார். தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்திருக்கிறோம். லிபிகா மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதால் அவருக்கு நாங்கள் பாதுகாப்பு அளித்துள்ளோம் என்றார்.