'கையெடுத்துக் கும்பிட்டும்' விடாத போலீஸ்- கைதானார் சுப்ரதா ராய்
லக்னோ: சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராயை இன்று லக்னோ போலீஸார் கைது செய்தனர்.
அவரது வீட்டுக் காவல் கோரிக்கையையும் போலீஸார் நிராகரித்தனர். தற்போது தன் மீதான கைது வாரண்ட்டை ரத்து செய்யக் கோரி உச்சநீதி்மன்றத்தில் ராய் தாக்கல் செய்திருந்த மனு மார்ச் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக அவரது லக்னோ வீட்டை முற்றுகையிட்டு நேற்று போலீஸார் ரெய்டு நடத்தினர். ஆனால் வீட்டில் ராய் இல்லை. இதனால் போலீஸார் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தான் தலைமறைவாகவில்லை என்றும் தப்பி ஓடவில்லை என்றும் லக்னோவில்தான் இருப்பதாகவும் இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும் தனது தாயாருக்கு உடல் நலம் சரியி்ல்லை என்பதால் தன்னை மார்ச் 3ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்றும், தாயாருடன் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்திலும் மனு செய்துள்ளார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள சஹாரா நிறுவனத்தின் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெறும் ஹோட்டல் லலித்துக்கு போலீஸார் விரைந்தனர். ஆனால் அங்கு ராய் இல்லை என்று தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்று காலை பத்தரை மணியளவில் ராயை லக்னோவில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இந்தத் தகவலை உடனடியாக அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
மேலும் ராய் ஏற்கனவே கோரிக்கை விடுத்து தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக கருதி இன்றே விசாரிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் கோர்ட் அதை ஏற்க மறுத்து விட்டது. ராய், மார்ச் 3ம் தேதி வரை போலீஸ் காவலில் இருப்பார் என்றும் மார்ச் 4ம் தேதி அவரது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கோர்ட் கூறி விட்டது.
முன்னதாக இன்று காலை ராய் வெளியிட்ட அறிக்கையில், நான் தப்பி ஓடவில்லை, நான் லக்னோவில்தான் இருக்கிறேன். இரு கைகளையும் கூப்பியபடி, மனிதாபிமானத்துடன் எனக்குக் கருணை காட்டுமாறு மரியாதைக்குரிய நீதிபதிகளை நான் கேட்டுக் கொள்வது, எனது தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவருடன் நான் தங்க அனுமதியுங்கள், என்னை வீட்டுக் காவலில் வையுங்கள் என்பது மட்டுமே என்று கூறியுள்ளார் ராய்.
ஆனால் ராயின் கோரிக்கையை உச்சநீதிமன்றமும் ஏற்கவில்லை, காவல்துறையும் ஏற்கவில்லை.